புதன், 25 ஜனவரி, 2012

மொழிப்போர் ஈகிகளுக்கு வீரவணக்கம்!!!

இன்று திமுக சார்பில் எங்கள் ஊரில் நடந்த மொழிப்போர் ஈகிகளுக்கு வீரவணக்க கூட்டத்திற்கு சென்று இருந்தேன். யார் நடந்தினால் என்ன, எதற்கான கூட்டம் என்பது தானே முக்கியம் என என்னை நானே சமாதானம் செய்து கொண்டு பங்கேற்க சென்றேன், நம் மொழிக்காக இன்னுயிர் ஈந்த ஈகிகளுக்கு வீரவணக்கம் செய்ய.

"கல்லக்குடி கொண்ட கருணாநிதி"..."பாம்பும் பல்லியும் படுத்து உறங்கும் பாளையங்கோட்டை சிறையில் வாடிய கலைஞர்" என ஹனீபா சிலாகித்து பாடிக் கொண்டு இருந்தார். மொழிப்போர் தியாகி பற்றியோ, தமிழின பெருமை சொல்லும் பாடலோ இல்லாமல் இது என்ன என்று என் மனதிற்குள் கேள்வி.

6மணிக்கு ஆரம்பம் என அறிவிப்பு செய்து, மணி 7.30ஆகியும் கூட்டமே இல்லையே..நாம் போய் இருக்கையில் அமர்ந்து ஆதரவு கொடுப்போம் என உள்ளே சென்றால் சாராய நெடி.நொறுக்கு தீனி விற்போர் அவசர அவசரமாக கடை விரிக்க ஆரம்பித்தனர்(தமிழின உணர்வு கூட்டம் என்றால்..அரங்கிற்கு வெளியே நூல்கள்,குறுந்தகடுகள் விற்பார்கள். ஆனால் கழக கூட்டங்களில் மட்டும் ஏன் நிலக்கடலையும் காரசாரமான முறுக்கும் விற்கிறார்கள் என அப்போது தான் புரிந்தது)

ஓரளவு கூட்டம் சேர்ந்ததும் கூட்டம் 8மணிக்கு ஆரம்பம் ஆனது. கரைவேட்டிகள் மேடை ஏறினர்.

"..வேண்டும் என்றே கைது நடவடிக்கைகள், பொய் "கேசுகள்" என ஜெயலலிதாவின் அட்டூழியம் பெருகிக் கொண்டே போகிறது,விரைவில் திமுக ஆட்சி மலரும்" என மொழிப்போர் தியாகிகள் கூட்டதிற்கு கழக உடன்பிறப்பு ஒன்று வரவேற்புரை நிகழ்த்தியது.

அடுத்து பேசியவர் "நீ ஏன் உன் கட்சி கூட்டத்தில் தலைவரின் தத்துவ பாடலை போடுகிறாய், 17வயசில இளநி விற்ற பாட்டை போடவேண்டியது தானே" என கூட்டத்தின் மையக்கருவிற்கு மக்களை இழுத்துச் சென்றார்.

இனி இங்கிருந்தால் "மொழிப் போர் என்றால் என்ன..அது எந்தெந்த கட்சிகளுக்கு இடையே,எந்த நூற்றாண்டில் யார் தலைமையில் நடந்தது" என்ற பல்வேறு கேள்விகள் எனக்குள் எழலாம் என அபாயம் உணர்ந்து கூட்டத்தை விட்டு கூடு நோக்கி பறந்தேன்.


முகநூலில் பின்னூட்டம் இட இதை சொடுக்கவும்:
  1. http://www.facebook.com/pulikkodi/posts/259004227505808
  2. http://www.facebook.com/groups/ulagath.tamilar.ondriyam/290716150984879/



மொழிப்போர் சிந்தனைக்காக,தன் உயிர்நீத்த ஈகிகள் நினைவேந்தளுக்காக கீழே சில கட்டுரைகள்

மொழிப்போர் ஈகியருக்கு த.தே.பொ.க. வீரவணக்கம்!

1938 – 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி மடிந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் சனவரி 25 அன்று 'மொழிப்போர் ஈகியர்' நினைவுநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் மொழிப்போர் ஈகியரின் நினைவிடங்களில் வீரவணக்கம் செலுத்தி, தமிழ்மொழி காக்க சூளுரை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாண்டும் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.



வளர்ச்சிக்கு தாய்மொழி இன்றிய​மையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள வளர்ச்சிக்கு தாய்மொழி அன்றி, வேறொரு மொழியைத் திணிப்பது தாய்நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நினைக்கிறேன்!” – காந்தி தாய்மொழி குறித்துத் தீர்க்கமாகச் சொன்னது இது! அகிம்சை என்கிற ஒன்றை மட்டுமே அவர் போதித்ததாக நினைத்து, புத்தி மறத்துக்கிடக்கும் எம்தமிழன் ஆண்டுதோறும் சனவரி 25-ம் தேதி மறக்காமல் அனுசரிக்கிறான், மொழிப்போர் தியாகிகள் தினமாக. இனத்தை மறந்தவன், மொழிக்காக விழுந்த பிணத்தை மறந்தவன், தியாகிகள் தினத்தையாவது மனதில் வைத்திருக்கிறானே என மனதை தேற்றிக்கொள்ளலாம்.
‘நாளை என் மொழி அழியுமானால், இன்றே நான் அழிவேன்!’ என உரக்கச்சொன்னான் அம்சத் என்கிற பற்றாளன். ஆனால், மொழியைக் காக்க தங்களையே அழித்துக்கொண்ட தாளமுத்து ராசேந்திரன், அரங்கநாதனை எல்லாம் அடையாளம் மறந்துவிட்டு, தினத்தை மட்டும் ஒப்புக்கு அனுசரிப்பது, நெஞ்சத்தை அறுத்துவிட்டு நினைவஞ்சலி செலுத்துவதுபோல் அல்லவா இருக்கிறது. தமிழ் மொழிக்காக தன் மூச்சு நிறுத்தியவர்களை நாம் எந்த அளவுக்கு இழிவுபடுத்துகிறோம் என்பதற்கு ஓர் உதா’ரணம்’ சொல்லவா தமிழர்களே… மொழிக்காக உயிர்விட்டவனின் மூச்சைக் கௌர​விக்க சென்னையில் ‘அரங்கநாதன் சுரங்கப்பாதை’ என்று பெயர் வைத்தோமே… அதை இன்றைக்கு எப்படி உச்சரிக்கிறார்கள் தெரியுமா? ‘அரங்கநாதன் சப்-வே’ என்று… தமிழுக்காக உயிர்விட்டவனை ஆங்கில வார்த்தைகளால் அடையாளப்படுத்தும் ஈனத்தனத்தை வேறு எந்த இனத்திலாவது கண்டிருக்கிறீர்களா?
தாளமுத்துவின் கல்லறையை என்றைக்காவது கண்டிருக்​கிறீர்களா தமிழர்களே… அது இப்போது கல்லறையாக இல்லை… கழிவறையாக! மொழிப்போரில் முளைத்த எழுச்சியை வைத்து ஏற்றம்கண்டவர்கள், அந்தத் தியாகிகளின் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.



இமயம் வரை எனது இனம் பரவி இருந்தது என்பதற்கு அங்கே புலிக்கொடி பறந்த உதாரணங்கள் போதாதா? எங்கள் முப்பாட்டன் சேரன் செங்குட்டுவன் பாட்டி கண்ணகிக்கு கோயில் கட்ட இமயத்தில் கல் எடுத்த வரலாற்றை பாசிச’பட்டம் சூட்டுபவர்கள் மறுக்க முடியுமா? ஊரான் வீட்டுக் கல்லை எங்கள் பாட்டன் தொட்டு இருக்க முடியுமா? இமயம் வரை விரவி இருந்த எங்கள் இனம், எப்படியடா இப்படிச் சுருங்கிப்போனது? மொழித் திரிபும் மொழிக்கலப்பும் எங்களை இந்த அளவுக்கு முடக்கி​விட்டதே… கருவியை ஆயுதம் என்றோம். கோயிலை ஆலயம் என்றோம். மகிழ்ச்சியை சந்தோஷம் என்றோம். மலரை புஷ்பம் என்றோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை சமஸ்கிருதக் கலப்பில் இருந்து பிரித்துப் பார்த்​தால், எங்களுடைய தூய தமிழ் தும்பைப்பூவாக வீசுமே… எங்கள் முப்பாட்டன் சேரனின் வாரிசு​களை மலையாளி ஆக்கி​விட்டு, நாங்கள் கொலையாளிகளாகத் தவிக்கிறோமே… எங்கள் மொழியின் முகத்தில் விழுந்த காயங்களைச் சொன்னால் அது தமிழ்ப் பாசிசமா?
அறிவழகன், இளஞ்சேரன், புகழ்மாறன், கணியன், இனியன் என்கிற பெயர்கள் எல்லாம் இன்றைக்கு ரமேஷ், தினேஷ், சுரேஷ் என்று மாறிப்போகிற அளவுக்கு எங்கள் மொழி, கலப்புக்கு களமாகி​விட்டதே…
ஈழத்தில் இத்தனை பிணங்கள் விழுந்தபோதும், ‘தமிழர்கள் இறந்தார்கள்’ என்றுதானே சொன்னார்கள். பர்மாவில் இருந்து துரத்தப்பட்டபோதும், மலேசியாவில் இருந்து விரட்டப்பட்டபோதும் தமிழர்கள் என்கிற அடையாளம்தானே அனைவராலும் அறியப்பட்டது. பிணமாகும்போதும் நாம் இனமாகத்தானே வீழ்​கிறோம். ஆனால், உயிர்வாழும்போது சாதிக்கும் மதத்துக்கும் கொடுக்கும் பற்றை என்றைக்காவது மொழிக்குக் கொடுத்து இருக்கிறோமா? பாலில் தண்ணீர் கலந்தால் வாங்க மறுக்கும் என் தமிழ்சாதி, அரிசியில் கல் இருந்தால் ஒவ்வொன்​றாகப் பொறுக்கிவீசிவிட்டு சமைக்கும் என் தமிழ்க்குடும்பம் உயிருக்கு நிகரான மொழியில் மட்டும் ஊடுருவலையும் கலப்பையும் அனுமதித்தது அடுக்குமா தமிழர்களே? எது ஒன்றிலும் கலப்படத்தை விரும்பாத நாம் தாய்மொழிக் கலப்படத்தைத் தடுக்காமல் போனது ஏன்? தாயோடு பிறிதொரு ஆண் இருப்பதை நெஞ்சத்தால் எப்படி நினைத்துப் பார்க்க முடியாதோ… அதேபோல்தான் தமிழர்களே, தாய்​மொழியில் அந்நியம் கலப்பதும்!
இங்கே ஸ்ட்ரீட் இருக்கிறது; தெரு இல்லை. எக்ஸ்டென்ஷன் இருக்கிறது; விரிவு இல்லை. ரோடு இருக்கிறது; சாலை இல்லை. போகவேண்டிய இடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டால், ‘லெஃப்டில் கிராஸ் பண்ணி, யு டர்ன் அடிச்சா ஸ்பாட் வந்துரும்!’ என பதில் சொல்கிறார்கள். அடக்கொடுமையே… வழி கேட்கும் இடத்தில்கூட நம் மொழி கேட்க முடியவில்லையே! வாய்மொழியாகக்கூட என் தாய்மொழியை இந்தத் தமிழகத்தில் கேட்க முடியவில்லையே… மூளை நரம்புகளை முறுக்கேற வைக்கவேண்டிய இந்த வருத்தம், எந்தத் தமிழனிடத்திலும் முளைக்காமல் போனது ஏனய்யா?
ஒவ்வொரு தமிழனின் மண்டையிலும் மான உணர்வு மரித்துப்போனதற்குக் காரணம்… நாம் தண்ணீர் பருகுவது இல்லை. மாறாக வாட்டர் குடிக்கிறோம். சோறு உண்பது இல்லை. ரைஸ் உண்கிறோம். காலை​யில் ‘குட் மார்னிங்’, இரவில் ‘குட் நைட்’ என்பதை வழக்கமாக்கிக்கொண்டோம்!
கோடிகளைக் கொட்டி செம்மொழி மாநாடு நடத்தியவர்கள், ஆறே மாதங்களில் வணிக நிலையங்​களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டப்படும் என சூளுரை சொன்னார்களே… இந்த நொடி வரை எங்கேயாவது தமிழ்ப் பெயர்களைத் தாங்கிய வணிகப் பலகைகளைப் பார்க்க முடிகிறதா? ஆனால், ஈழத்தில் அப்போதே அண்ணன் பிரபாகரன் வங்கியை ‘வைப்பகம்’ என்றும் பேக்கரியை ‘வெதுப்பகம்’ என்றும் மாற்றினார். ”வெதுப்பகம்னு சொன்னப்ப சனங்க எல்லோரும் சிரிச்சாங்க தம்பி… ஆனால், இப்போது பேக்கரின்னு சொன்னா சிரிப்பாங்க தம்பி. நாம் உறுதி எடுத்தால் நிச்சயம் நிலைமை எல்லாம் மாறும்!” என அண்ணன் சொன்ன வார்த்தைகள் மறக்கக்கூடியவையா?
அண்ணன் தமிழ்ச்செல்வனின் இயற்பெயர் தினேஷ். ஒரு திருமண நிகழ்வுக்கு தமிழ்ச்செல்வனோடு தலைவர் போய் இருக்கிறார். அப்போது தமிழ்ச்செல்வனின் தமிழாசிரியை தலைவரிடம், தமிழ்ப் பெயர்களின் அவசியம் குறித்து வலியுறுத்தி இருக்கிறார். அப்போதே துடித்துப்​போன அண்ணன் பிரபாகரன், ‘இயக்கத்தில் இருப்பவர்கள், முழுதும் தமிழின அடையாளத்தோடு மட்டுமே இருங்கள்!’ என ஓர் உத்தரவு போட்டார். போராளிகள், தலைவர்கள், தளபதிகள் பெயர்கள் எல்லாம் அன்றைக்கே தமிழ்ப் பெயராயின!
மாற்ற முடியும் என்கிற மன உறுதியும், மாற்ற வேண்டும் என்கிற நோக்கமும் தமிழகத்தை ஆண்ட – ஆளும் தலைவர்கள் எவருக்​குமே இல்லாமல் போனது ஏன்? கர்நாட​கத்தில் ஆங்கிலப் பெயரைத் தாங்கி வணிகப் பலகைகள் இருந்தால், அங்கே கிளம்பிச்செல்லும் கன்னட அமைப்பினர், அப்போதே ஆங்கிலப் பெயரை அழித்து, கன்னடத்தில் எழுதுகிறார்கள். அந்த இடத்திலேயே அந்த நிறுவனத்துக்கு அபராதம் போடுகிறார்கள். அதற்கு காவல் துறையும் துணையாகத்தானே நிற்கிறது… அதையத்த வீரம், இந்த அன்னை மண்ணில் எவருக்குமே ஏற்படாதது ஏனய்யா தமிழர்களே?
ரஷ்யாவில் இருந்து பிரிந்த லாட்வியா நாட்டில், அவர்களின் தாய்மொழியில் ரஷ்ய மொழியின் கலப்பு இருந்திருக்கிறது. அதைத் தடுக்க அந்த நாட்டில் சீருடை இல்லாத காவலர்களை நியமித்து, ரஷ்ய மொழியைக் கலந்து பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். சட்டம் போட்டு மொழியைக் காக்கத் துடிக்கும் நாடுகளுக்கு மத்தியில், நாம் திட்டம் போட்டு ஆங்கில மோகம் பிடித்து அலைவது நியாயமா தமிழர்களே?
ஆங்கிலம் என்பது அறிவு என நினைக்கும் அதிமேதாவிகளே! அமெரிக்காவில் ஆடு மேய்ப்பவனும், பிரிட்டனில் பிச்சை எடுப்பவனும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது அறிவின் உச்சமா? இங்கிலாந்தின் காலடியில் வாழும் ஜெர்மனும் பிரான்ஸும் தங்கள் மொழியில் ஆங்கிலக் கலப்பை இன்றைக்கும் அனுமதிக்கவிடாமல் கட்டிக்காக்கையில், 50 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியச் சிறப்புக்கொண்ட நம் தமிழ் மொழியை பாழாக்கித் தவிக்கிறோமே! ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக இருந்த வரை தவறு இல்லை. ஆனால், ஆங்கிலமே பயிற்று மொழியாகி, தமிழ் மொழிப்பாடமாக மாறிய துயரத்தை மறத்தமிழன் மறந்தும்கூடத் தட்டிக்கேட்கவில்லையே! தாய்த்தமிழ்ப் பள்ளிகளை அங்கீகரிக்க மறுக்கும் இந்தத் தமிழக அரசு, ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஏகபோக அங்கீகாரத்தை அள்ளி விடுகிறதே… உண்மையில் பார்த்தால், கலப்பாலும் திணிப்பாலும் கதறிக்கிடக்கும் தமிழைக் காக்கத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை இந்த அரசாங்கம்தானே முன்னின்று நடத்தி இருக்கவேண்டும்?!
‘ஸோ’ என்று சொல்லாமல் நமக்கு சோறு இறங்குவது இல்லை. ‘ஆக்ச்சுவலி’ இல்லாமல் நாம் எதையும் ஆரம்பிப்பது இல்லை. அன்பை வெளிப்படுத்தக்கூட ‘ஐ லவ் யூ’தானே! ‘சார், சார்’ என்றுதான் மோர் ஊற்றுகிறோம்… ‘மேடம், மேடம்’ எனச் சூடம் காட்டுகிறோம்!
‘வெள்ளைக்காரா, எங்களை அடிமைப்படுத்த நீ தேவை இல்லை. உன் மொழியே போதும். அதை விட்டுவிட்டுப் போ’ எனச் சொன்னவர்களாக – சொரணையற்றவர்களாக – அந்நிய மொழியில் நாம் சொக்கிக்கிடக்கிறோம் தமிழர்களே… சுதந்திரம் வாங்கியவர்களாக சொல்லிக்கொண்டாலும், இப்போதும் நம்மை வெள்ளையர்கள்தான் ஆள்கிறார்கள். அன்றைக்கு நாட்டை… இன்றைக்கு நாக்கை!

மொழிப்போர் தொடங்கியது!

தமிழ்பேப்பர் 

இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்துக்கொண்டிருந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய மாற்றம் ஒன்று நடந்தது. ஆட்சி மற்றும் அரசுப் பதவிகளில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அவற்றில் இருந்து விலகி, கட்சிப்பணிக்குத் திரும்பவேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்தத் திட்டத்தின் பெயர் காமராஜர் திட்டம் (K Plan). அதன்படி நாற்பதுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சிப்பணிக்குச் சென்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் பதவி விலகினார். அந்தப் பதவிக்கு பக்தவத்சலம் வந்தார். காமராஜரின் ராஜினாமாவுக்குப் பரிசாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஆகப்பெரிய திருப்பம் நடந்தபோதும் திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தது. சேலம், தஞ்சை, நெல்லையில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. இறுதியாகச் சென்னை மாநாடு. 13 அக்டோபர் 1963 அன்று நுங்கம்பாக்கத்தில் கூடியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஆட்சிமொழி பற்றிய 17-வது பிரிவின் நகலை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை அங்கே அறிவித்தார் அண்ணா. இது வெறும் அடையாளப்போராட்டம் அல்ல, ஓரிரு நாளில் முடிந்துவிடுவதற்கு. 26 ஜனவரி 1965 வரை தொடர்ச்சியாக நடக்கும் போராட்டம் என்று அறிவித்தார் அண்ணா.
எந்தெந்த ஊரில் யார்யார் போராட்டத்தை நடத்துவது என்பது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஊருக்கும் ஐந்து பேர் கொண்ட அணி. சென்னையில் அண்ணா தலைமையில் ஒரு ஐவர் அணி. கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டது தஞ்சாவூர். அவருடைய அணியில் மன்னை நாராயணசாமி, மாயவரம் கிட்டப்பா, எஸ். நடராசன், அ. நடராசன் ஆகியோர் இருந்தனர். போராட்டத்துக்கு மக்களைத் திரட்டும் வகையில் நேரே தஞ்சாவூர் சென்று அந்தப் பகுதிகளில் பிரசாரம் செய்தார் கருணாநிதி.
போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே அண்ணா உள்ளிட்ட சிலரைக் கைது செய்திருந்தது அரசு. எனினும், நாடு தழுவிய அளவில் சட்ட நகல் கொளுத்தும் போராட்டம் நடந்தது. மற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டபோதும் கருணாநிதி கைது செய்யப்படவில்லை. ஆனால் போராட்டம் எல்லாம் முடிந்தபிறகு 19 டிசம்பர் 1963 அன்று கருணாநிதியைக் கைது செய்தது அரசு. ஆறுநாள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
திமுக நடத்திய போராட்டங்கள், மாநாடுகள் இளைஞர்களின் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தன. அதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது சின்னச்சாமி
என்ற இளைஞரின் மரணம்.
திருச்சி மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த இளைஞர் சின்னச்சாமி. திமுக தொண்டர். திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்திறங்கிய அந்த இளைஞருக்கு அதே ரயிலில் வந்திறங்கிய முதலமைச்சர் பக்தவத்சலத்திடம் பேசவேண்டும் என்ற ஆர்வம். இந்தித் திணிப்பைத் தடுக்கக்கூடாதா என்ற கேள்வியை முதல்வரிடம் எழுப்பினார். மறுநொடி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் திருச்சி சென்ற அந்த இளைஞர், தமிழுக்காகத் தன் உயிரைப் பலிகொடுப்பதாகக் கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தீக்குளித்தார். நான்காவது மொழிப்போரின் முதல் களப்பலி. சிங்கத்தமிழன் சின்னச்சாமி.
மொழிப்போராட்டம் அணையாமல் நடந்துகொண்டிருந்தபோது தேசிய அளவில் மிகப்பெரிய இழப்பு. பிரதமர் ஜவாஹர்லால் நேரு 27 மே 1964 அன்று மரணம் அடைந்தார். அவருக்குப் பதிலாக லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். ஆட்சி மொழி மசோதாவைக் கொண்டுவந்த சாஸ்திரியே தற்போது பிரதமர் ஆகிவிட்டதால் மொழிப்போராட்டம் முன்னைக் காட்டிலும் தீவிரமடைந்தது.
அப்போது இலங்கையில் இருந்து கருணாநிதிக்கு அழைப்பு ஒன்று வந்த்து. அனுப்பியவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். தங்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்று அழைத்திருந்தனர். விஷயம் இலங்கை அரசுக்குச் சென்றது. உடனடியாகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கருணாநிதியின் வருகை தடுக்கப்பட்டது. இதுவிஷயமாக இலங்கை நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது. அதற்கு ஆளுங்கட்சித் தலைவர் சி.பி. டிசில்வா விளக்கம் கொடுத்தார்.
’திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த எவரையும் இலங்கையில் அனுமதிக்கமுடியாது. ஆகவே, கருணாநிதிக்குத் தடை விதிக்கப்பட்டது.’
உடனடியாக எழுந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் நவரத்தினம், ‘திமுக ஒருபோதும் தடைசெய்யப்படவில்லை. அது இந்தியாவில் இருக்கும் ஜனநாயகக் கட்சிகளுள் முக்கியமானது. அந்தக் கட்சிக்கு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பிரிவினை, சட்ட விரோத செயல்கள் ஆகியவற்றும் திமுகவுக்கும் தொடர்பில்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.
26 ஜனவரி 1965 நெருங்கிக் கொண்டிருந்தது. ஆம். இந்தி மொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக மாறும் நாள். அந்த நாளை துக்கநாளாக அனுசரிக்க திமுக முடிவுசெய்தது. கண்டனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கறுப்புக்கொடிகள் ஏற்றப்படும் என்றும் கறுப்புச்சின்னம் அணிவது என்றும் முடிவானது. இவை அனைத்தும் திமுக செயற்குழுவில் தீர்மானமாக நிறைவேறி, கூட்டறிக்கையாகவும் வெளியிடப்பட்டது. அதில் கையெழுத்திட்டவர்களில் கருணாநிதியும் ஒருவர்.
குடியரசுத் தினத்தன்று துக்கநாள் அனுசரிப்பது துரோகச்செயல். அதைச் செய்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம். போராட்டத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க அரசு தயாராகிவிட்டதை உணர்த்தியது அந்த அறிவிப்பு. ஆனால் குடியரசு நாளை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று விளக்கம் கொடுத்தார் கருணாநிதி.
குடியரசு நாள் என்பது குழந்தை. அதன் தலையில் இருக்கும் நச்சுப்பழம் இந்தி. திமுக குறிபார்ப்பதில் கெட்டிக்காரக்கட்சி. குடியரசு நாளுக்கும் அவமதிப்பு வராமல் இந்தி ஏகாதிபத்தியத்தையும் பிளந்திடத் தவறாமல் திமுக அம்பு எய்து வெற்றிபெறும் திறமைபெற்றது.
போராட்டத்துக்காக அண்ணா குறித்திருந்த தேதி 26 ஜனவரி 1965. ஆனால் அதற்கு முன்பே அண்ணா கைது செய்யப்பட்டார். பிறகு நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், அன்பழகன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த இளைஞர்கள் தயாராகினர். வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு மாணவர்கள் சாலைக்கு வந்தனர். இந்த இட்த்தில்தான் மொழிப்போராட்டம் மாணவர் போராட்டமாக உருவெடுத்தது.
மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் மாயவரம் உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர். அரசியல் சட்டத்தின் பதினேழாவது பிரிவின் நகலுக்குத் தீவைத்தனர். இந்திப் புத்தகங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. முதல்வரைச் சந்திக்கச் சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
தமிழ் உணர்வால் உந்தப்பட்ட கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், மயிலாடுதுறை சாரங்கபாணி, அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி என்று பல இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். போராட்டம் வலுத்துக்கொண்டிருந்தபோதும் இந்தித் திணிப்பை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என்று சொல்லிவிட்டார் பிரதமர் சாஸ்திரி. ரயில் மறியல், உண்ணாவிரதம் என்று மாணவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். பதிலடியாக, மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பக்தவத்சலம் அரசு.
அடக்குமுறைகள் தொடர்ந்தபோதும் மாணவர்கள் போராட்டம் ஓயவில்லை. நிலைமையை சீராக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு. இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்கும். ஆகவே, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்றார் மத்திய அமைச்சர் குல்சாரி லால் நந்தா.
ஆனாலும் மாணவர்கள் அமைதிகொள்ளவில்லை. காரணம், மத்திய அரசை அவர்கள் நம்பவில்லை. இந்நிலையில் திடீரென அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மாணவர் தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்துப் பேசினர். ‘இழைக்கப்படும் அநீதியை உலகறியச் செய்வதில் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. ஆகவே, மாணவர்கள் தங்கள் நேரடி நடவடிக்கையை நிறுத்திவையுங்கள்’ என்றார் அண்ணா. விளைவு, போராட்டம் முடிவுக்கு வந்தது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக