வியாழன், 16 செப்டம்பர், 2021

"மனசாட்சியே இல்லாமல் இருக்காங்களே"- அங்கலாய்த்துக் கொண்ட மருத்துவர்

கட்டி ஒன்று. ஸ்கேன் எடுக்க சென்றேன்.

சற்று நேரம் கழித்து

பணிப்பெண்  : சார்..நீங்க உள்ள போகலாம் 

(மருத்துவர் காதில் அலைபேசியில் பேசியபடியே.. இருந்தார் .)

உதவியாளர்: ஐயா நீங்க படுத்துகோங்க

மருத்துவர் அலைபேசியில்: ,,,"போங்கண்ணே...எனக்கு மனசே கஷ்டமா இருக்கு" 

மருத்துவர்: ஐயா..உங்க உடைய கொஞ்சம் தளர்த்திகோங்க

(கட்டி மீது ஜெல் தடவிய படியே சம்பாசனை நடக்குது)

"வயலை பார்த்துக்கிறதையே விட்டுடலாம்னு தோணுது.

இப்படி எல்லாமா மனுசங்க இருப்பாங்க ...அதுக்குன்னு மனசாட்சியே இல்லாமல்.  வந்து ஒரு வேல கூட பாக்கலேண்ணே. 700 ரூவா கேக்குறான்

இப்ப நினைச்சாலும் BP ஏறுது. 

ஏதோ உங்ககிட்ட சொல்லலாமேன்னு கூப்டேன்.

சுப்பிரமணி காலைல இருந்து சாயங்காலம் 7 வரை வேலை செஞ்சான். அவன் 700 ரூவா கேட்டான். அது பரவா இல்ல. இவன் 4 மணிக்கு வந்து 7 மணிக்கெல்லாம் கிளம்பிட்டான். சுளையா 700ரூவா கேக்குறான்"/

(என்னடா இது. ஜெல் தடவி இவ்ளோ நேரம் ஆச்சே. இன்னும் ஸ்கேன் எடுக்கலையே. ஒரு வேலை ஊறபோட்டு எடுப்பாங்களோ- மனதில் நினைத்துக் கொண்டேன் )

மருத்துவர் அலைபேசியில் தொடர்ந்து- "சரிண்ணே ,,நாளைக்கு நான் வர மாட்டேன். நீங்களே பேசி செட்டில் பண்ணி அனுப்புங்க. நான் போன் வைக்கிறேன்" 

மருத்துவர்: ம், முடிஞ்சது. ரிப்போர்ட் இருந்து வாங்கிட்டு போய்டுங்க 

வெளியில் வந்தேன். 

பணிப்பெண் : "பணமா குடுங்க. கார்ட் கிடையாது"

நான்: எவ்ளோ

பணிப்பெண் : ரூ 700

நாலு மணி நேரம் வேலை செய்தவனுக்கு 700 ருபாய் கேட்டவனுக்கே  மனசாட்சி இல்லைனா.. அப்போ இது என்னவா இருக்கும் ? ஆனா இவங்க பரவா இல்லை. திருச்சி அப்பல்லோ காரன் இதே ஸ்கேன்கு 7,000 ரூபா கேட்டானே. 

இப்படி கொள்ளை அடிக்கிறார்களே என்று அழுத அந்த மருத்துவரின் கணவர் தான் 20 ஆண்டுகளுக்கு முன் ஊனமுற்ற என் நண்பனுக்கு ஊனம் தான் என சான்றிதழ் அளிக்க அப்பவே ரூ.100 வாங்கியவர்.

பணத்தை கொடுத்துவிட்டு வெளியில் வந்த பிறகு தான் தோன்றியது..நாள் முழுக்க இரவு வரை வேலை செய்கிற இந்த பொண்ணுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பாங்க மனசாட்சி உள்ள அந்த மருத்துவர் அம்மா  ?


-தமிழ்மது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக