செவ்வாய், 27 நவம்பர், 2012

ஏ.ஆர்.முருகதாஸ்-பாட்டு பாடி பிச்சை கேட்டது அம்பலம்

ஏ.ஆர்.முருகதாஸ் ஒன்றுக்கும் உதவாத இந்திய இராணுவத்தை தனது துப்பாக்கி படத்தில் தூக்கிப் பிடித்ததன் மூலம் "இன்னும் என்ன தோழா" எனப் பாடி தமிழ் மக்களிடம் பிச்சை கேட்டது அம்பலம் ஆகிவிட்டது.

சென்ற தீபாவளி அன்று  ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கிய "ஏழாம் அறிவில்" 
"இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே...
கழுத்தோடும் "ஒரு" ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்..." 


என்ற பாடலை புகுத்தி ஏதோ தமிழன் உணர்வு பொங்குவதாக சித்தரித்து ஈழ மக்கள் படும் அவலத்தை பார்த்து தாங்கள் கண்ணீர் சிந்துவதாக நடித்து நம்மிடம் இரக்கத்தை உண்டாக்கி பிச்சை கேட்டது ஓராண்டு காலத்திற்குள்ளேயே அம்பலம் ஆகிவிட்டது,தனது அடுத்த படமான "துப்பாக்கியில்" இந்திய இராணுவத்தை போற்றி துதி பாடி இருப்பதன் மூலம். 

உண்மையிலேயே இவர் ஈழ மக்கள் மேல் கரிசனம் கொண்டவராக இருந்திருந்தால் 6000க்கும் மேற்பட்ட எம் மக்களை அமைதிப்படை என்ற பெயரில் கொன்றொழித்த, வன்புணர்ச்சி செய்த மிருகங்களை தன்னகத்தே கொண்ட இந்திய ராணுவத்தை பற்றி,தமிழ் மக்களை எப்போது காழ்ப்புணர்வுடன் நடத்தும் இந்தியத்தை பற்றி  போற்றி படம் எடுக்க மனம் விழையுமா?

இன்றைய நாட்களில் அரசியல்வாதிகள் எல்லாம் நடிகர்களாக இருக்கிறார்கள்; நடிகர்கள் எல்லாம் அரசியல் செய்கிறார்கள். நமது இரக்க உணர்வை பயன்படுத்தி நம்மிடம் கொள்ளை அடிக்கும் இவர்களை போன்றவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்வதும் ஒதுக்கி வைப்பதும்  இன்றைய கால கட்டத்தில் அவசியம்.

நாங்கள் உங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எங்கள் மீது இரக்கம் காண்பிப்பது போல அனுசரணையாக இருப்பது போல பாவிக்கவேண்டாம் என்றுதான் கேட்கிறோம்.