புதன், 19 பிப்ரவரி, 2014

தோழர் பாலு மகேந்திரா ஓர் அழியாத காவியம்


காசு பார்க்கும் கூட்டத்தில் 74 அகவை வரை தனது கொள்கையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல்;தனது தனித் தன்மையை இறுதிவரை இழக்காமல் அழியாத கோலங்கள் பல படைத்து தமிழினம் தன்னை உணர வேண்டும் என்ற நோக்கை பொதுவாழ்வில் வலியுறுத்தியும் தனது திரைத்துறையில் எதாவது ஒரு கோணத்தில் புகுத்தியும் வந்த வீரத் தமிழனை, மட்டக்கிளப்பில் இருந்து புறப்பட்டு வந்த மண்ணின் மைந்தனை ஒரு சிறந்த மனிதனை இழந்து நிற்கிறோம் என்கிற போது கண்ணில் கண்ணீர் துளிகள்.


 "நீயும் செத்துடுவியா தாத்தா" என ஆதி கேட்கும்போது நான் திரைப்படம் என்பதையும் மீறி ஒரு நிமிடம் உண்மையை உணர்ந்தேன்-இறுதியாக வந்த  தலைமுறைகள் படத்தில் தங்களை உணர்ச்சிபட வைத்த காட்சி எது என்று கேட்ட போது அவர் சொன்னது. ஒரு நல்ல கலைஞனுக்கு தனது முடிவு முன்பே தெரிந்து விடும் என்று சொல்வார்களே. அது உண்மை தானோ!!

தனக்கு இருந்த திறமைக்கு ஏதோ ஒரு குப்பையை கொட்டி காசு பார்த்திருக்க முடியும். ஆனால் நல்ல தரமான படைப்புகளை மட்டுமே தரவேண்டும் என்கிற கொள்கையில் இருந்த உறுதி, தூய தமிழிலேயே  தலைப்பிட்டு பல வெற்றிகரமான  படங்களை தந்த அவர் ஒரு வெற்றி இயக்குனர் மட்டும் அல்ல, தனது படங்களையே நல்ல இலக்கியமாக படைத்த சிறந்த இலக்கியவாதி என்பதையே உணர்த்துகிறது.


இன விரோதிகள் இவர்களை எல்லாம் விட்டுவைத்து,


உணர்வாளர்களான இவர்களை நம்மிடம் இருந்து பிரிக்கும் இரக்கமற்ற இயற்கை மீது தான் கோவம் வருகிறது.