வியாழன், 28 பிப்ரவரி, 2013

நாகப்பட்டிணம் தேவி திரை அரங்கும்- பகல் கொள்ளையும்

சில்லரையிலேயே குறியாக இருக்கும் திரை உலகில் தமிழினத்திற்காக குரல் கொடுக்கின்ற தமிழராச்சே,அவர் இயக்கம் படத்தை திருட்டுத் தனமாக பார்க்கக் கூடாது,திரையில் பார்ப்பது தான் அவருக்கு வெகுமானம் என அமீரின் ஆதிபகவன் பார்க்கலாம் என நாகப்பட்டிணத்தில் உள்ள தேவி திரை அரங்கு சென்றேன்.

குளிரூட்டப்பட்ட அரங்கு என போட்டு குளிரூட்டியும் போட மாட்டார்கள்;அங்கொன்றும் இங்கொன்றுமாக மின் விசிறி மட்டும் சில நேரம் ஓடும்;இருக்கைகுள் மூட்டை பூச்சி கடிக்கும்.பஞ்சு குதறப்பட்டு இருக்கை பல்லை காமிக்கும்;ஒலி அமைப்பு சுத்தமாக சரி இருக்காது. வீட்டிற்கு  வந்து யுட்டூயுபில் வந்து பார்த்தால் தான்,ஓ இது தான் வசனமா என விளங்கும்.  அப்படி ஒரு அரங்கு.  

ரூ.30க்கு சீட்டு அச்சடித்து ரூ.100 என்றார். வார இறுதி என்றால் கூட பரவாயில்லை. வார நாளில் இப்படி ஒரு கொள்ளையா என சரி போகலாம் என நினைத்தேன். வாகன பாதுகாப்பு (PARKING) எனக் கூறி ஒரு சீட்டை நீட்டி ரூ.10 அபகரிக்கமுயன்றார்.(அதில் ரூ.3 என அச்சிடப் பட்டு இருந்தது) 

நாகப்பட்டிணம் போன்ற மூன்றாந்தர ஊரிலேயே இப்படி பகல் கொள்ளை அடிக்கிறார்களே,சென்னை,திருச்சி,கோவையில் இவர்கள் கோவணத்தை கூட உருவி விட்டு தான் உள்ளேயே அனுமதிப்பார்கள் போல. 

ஒரு படம் எடுத்து வெளியிட எவ்வளவு கடினம்,எவ்வளவு உழைப்பு தேவை என்பதை நாங்கள் உணராமல் இல்லை.திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுக்கும் திரையுலக கனவான்களே...முதலில் இது போன்ற கொள்ளையர்களை தடுத்து நிறுத்துங்கள். கூட்டம் தானாக திரை அரங்கு வரும். 

(NAGAPATTINAM,DEVI THEATRE The worst theatr in Nagapattinam is Devi theatre, Avoid Thevi theatre,AMEER ADHIBAGAVAN)

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல;அவசியம்

நாகப்பட்டிணத்தில் இன்று (24/02/2013) நாம் தமிழர் கட்சி சார்பாக நாகை நகர அமைப்பாளர்கள் தங்கம் நிறை செல்வம்,ராஜேசு,மணி செந்தில்  மற்றும் விஜயன் முன்னேற்பாட்டால் பொதுக்கூட்டம் அவசரகதியில்  விளம்பரங்கள் அறிவிப்புகள் இல்லாமல் கூட்டப்பட்டதாக இருந்தாலும் ஓரளவு திரளான மக்களோடு நடைபெற்றது. கூட்டத்திற்கு  தோழர் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்,திருச்சி திரு.வேலுச்சாமி, நாம் தமிழர் சாகுல் ஹமீது,கல்யாண சுந்தரம்  அவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழினத் தாய்க்கு மருத்துவம் தராமல் திருப்பி அனுப்பிய, மருந்துப் பொருள்கள் ஏற்றிய கப்பலை ஈழத்திற்கு அனுப்ப இயலாத, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வேடிக்கை பார்த்து பொங்கி எழுந்த புரட்சியை அடக்கிய கருணாநிதியின் டெசோ நாடகத்தை தோலுரித்துக் காட்ட நடந்த கூட்டம்.

"கெட்டிக்காரனின் புளுகு ஏழு நாள்கள் தான்.ஆனால் இங்கு ஒருவர் எழுபது வருடங்களாக பொய்களை மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறார். முத்துக்குமரன் சனவரி 29 அன்று இறந்து மறுநாள் அழகிரியின் பிறந்தநாளின் போது கேக் வெட்டி கொண்டாடிய கருணாநிதி, விடுதலைப் புலிகளை கைகளை கட்டி முதுகில் சுட்டுக் கொன்ற புகைப்படங்களை காட்டி கருத்துக் கேட்டபோது,இந்த புகைப்படங்கள் எவ்வளவு தூரம் உண்மையோ என தெரியாது என்று கூறி விட்டு,இன்று பாலகன் பாலச்சந்திரன் புகைப்படத்தை பார்த்து விட்டு நெஞ்சு பதறுவதாக நாடகம் ஆடுகிறார்" என தோழர் கல்யாணசுந்தரம் தெலுங்கனின் தோலுரித்துக் காட்டினார்.

பாலகன் பாலச்சந்திரனையும் தீவிரவாதி என்ற ராஜீவ் கொலையாளி சுப்ரமணியசாமி தொ.கா.பேட்டியின் போது ஜெயின் கமிசன் உங்களை குற்றவாளி எனக் கூறி உள்ளதே என சுபவீ கேட்டபோது புறமுதுகு காட்டி ஓடியதை ஞாபகம் கூர்ந்த கல்யாணசுந்தரம் டெசோ மாநாட்டு அறிக்கையை ஐநாவில் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போர்வையில் தாக்கல் செய்த ஸ்டாலினின் தில்லுமுல்லு ஆட்டத்தையும் தோலுரித்துக் காட்டினார்.

மகனோ சிறையில்;தண்டனை அனுபவிப்பதோ தாய். ஒற்றை மகனை பெற்றெடுத்து  கார்த்திகேயன், ரகோத்தமன் இவர்களால் பொய்யாக புனையப்பெற்ற வழக்கில் 22 வருடங்களாக ஒரு தவறும் செய்யாது தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் குமுறிய போது மனசாட்சி உள்ள ஒவ்வொருவரின் இதயமும் குலுங்கியது உண்மை. "தவறே செய்யாவிட்டாலும் பழியை தன் மீது போட்டுக் கொள்கிற தமிழனாய் பிறந்துவிட்டோம். பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டு இன உணர்வோடு வாழ்ந்தோம்,இதைத் தவிர வேறு தவறு எதுவும் செய்யவில்லை" என அந்த தாய் சிந்திய கண்ணீர் இன்னும் ஈரம மறையாமல் எங்கள் மண்ணில்.

தூக்குக் கயிற்றின் கீழே காலம் தள்ளும் மூவரை "ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கொலையாளிகள்" எனக் கூறாதீர்கள். யாராவது அப்படி பேசும்போது அவர்கள் முன்னே சென்று எனது மகன் கொலையாளி அல்ல என்று உரக்கக் கத்தவேண்டும் போல தோன்றும் எனக் கூறிய போது உன்னத மகனை பெற்றெடுத்த அந்த தாயின் வேதனை புரிந்தது. அவர்களுக்கு சார்பாக பேசும் நாம் கூட அந்த வார்த்தைகளைத் தானே இன்றும் பயன்படுத்துகிறோம். இனியாவது தவிர்ப்போம் அப்படி கூறுவதை.

"ராஜீவ் படுகொலை-தூக்குக் கயிற்றில் நிஜம்" எழுதிய மானமிகுந்த ஒரே காங்கிரசுக்காரர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் தனது உரையில் ராஜீவ் காந்தி கொலையான உடனே,விசாரணை ஆரம்பிக்கும் முன்பே விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என சொன்ன அப்போதைய சட்ட அமைச்சர் சுப்ரமணிய சாமியை இழுத்து வந்து விசாரிக்கத் தவறிய கார்த்திகேயனை சாடினார். 

1973இல் எம்ஜியாரால் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் வென்ற போது,முரசொலி மாறன் "எங்கே போற போக்கை பார்த்தால் ஜெயலலிதா கூட முதலமைச்சர் ஆகி விடுவார் போல" எனக் கூறியதை நினைவு கூர்ந்தார். ஸ்டாலினைப் பற்றி அழகிரியோ,அழகிரியைப் பற்றி கனிமொழியோ பேச பயப்படுகிற காலகட்டத்தில் அனைவரையும் பற்றி தைரியமாக பேசுகிற குஷ்பு அடுத்த  முதல்வராகக் கூடிய வாய்ப்பு உள்ளது என ஆரூடம் கூறினார். மான உணர்வு அற்ற தமிழர்கள் இருக்கும் வரையில் இவர் கூறியது பலிப்பதர்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன.


சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக  1500 பிரதிகளுக்கு மேலாக தனது நூல் "ராஜீவ் காந்தி படுகொலை-தூக்குக் கயிற்றில் நிஜம்" விற்கப்பட்டதை வேலுச்சாமி கூறிய போது மக்களுக்கு உண்மையை அறிவதில் உள்ள ஆர்வம புரிந்தது. அந்த ஆர்வம்,உணர்வு உண்மையை உரிமையை நிலை நாட்டவும் தயங்காது முன்னெடுக்கப்படும் விரைவில்.

பஞ்சாபில் முதல்வர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றவரின் தூக்கு தண்டனை அந்த மண்ணின் மக்களின் வீறுகொண்ட போராட்டத்தால் நடுவண் அரசு அடிபணிந்து நிறுத்தி வைத்தது. ஆகவே அரசாங்கத்தை நாம் குறை கூறி பலன் இல்லை;மக்கள் எப்படியோ அப்படித் தான் அரசன். எனவே மக்களின் புரட்சியே மன்னனின் நிலையை நிலைப்பாட்டை மாற்றும் சக்தி. புரட்சியை முன்னெடுப்போம்; தமிழ் தேசியம் காண்போம்.

கூட்டத்தின் முடிவில் மிக மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் இறுதியில் வேலுச்சாமி பேசும்போது..."மூவர் விடுதலை பெற்று வரும்போது "அவன்" வருவான். அவன் வரும்போது இந்த துரோகிகள் புறமுதுகு காட்டி ஓடுவார்கள்" என்ற அவரது வார்த்தை. 

வருவான்டா பிரபாகரன்...

புதன், 13 பிப்ரவரி, 2013

சாதி வெறி ஊட்டும் பாமகவை புறந்தள்ளுவோம்

தமிழின் மீதிருந்த ஆர்வம் காரணமாக, தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கும் மக்கள் தொலைக்காட்சியை நான் விரும்பி பார்ப்பதுண்டு.

அங்ஙனமே..கடந்த ஞாயிறு (10.02.2013) மதியம் ஒரு நிகழ்ச்சி. பாமக-அன்புமணி ராமதாசின் மனைவி பேசிக்கொண்டு இருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே என்னால் கேட்க முடிந்தது.அதற்கு மேல் எனது பொறுமை எல்லை கடந்து தொலைக்காட்சியை அணைத்து விட்டு படுக்க சென்றுவிட்டேன். அவர் பேசியதின் சாராம்சம்-
நமது சமுதாய (வன்னிய சமுதாய) இளைஞர்களின் கணினி பயன்பாடு என்பது திரைப்படங்களை இணையதளங்களில் பார்க்கும் அளவில் மட்டுமே உள்ளது. நமது சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு சிறிது கூட இல்லை. சென்னையில் பயிலும் நமது சமுதாய இளைஞர்களுக்கு தாங்கள் என்ன சாதி என்றே தெரியவில்லை. நாமாக அவர்களுக்கு நாம் இந்த சாதியில் பிறந்துள்ளோம்,நமது சாதியை நாம் போற்றவேண்டும்.....தான் எந்த சாதி என்று தெரியாமலேயே இன்றைய இளைய தலைமுறை உள்ளது.இவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கமுடியும்? இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?
இவ்வாறாக அந்த அம்மணி பிதற்றிக் கொண்டு இருந்தார். தனது சாதி,தனது தோழன் சாதி,பாடம் புகட்டும் ஆசிரியர் இந்த சாதி என அறிய விழையாது சமத்துவ சமுதாயமாக இருக்கும் கல்லூரியில் சாதிவெறி பற்றி எரிய வேண்டும்;அதில் இவர்கள் குளிர் காய்ந்து வாக்கு அரசியல் நடத்தவேண்டும் என் பேரவா கொண்டிருப்பதும் அதை சிறிதும் வெக்கம் இல்லாது பறை சாற்றுவதும் நா கூச வைக்கிறது.
பாமகவின் வன்னியர் கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தர்மபுரி வெறியாட்டத்திற்கு பிறகு சாதி வெறியர்களுக்கு வெளிப்படையாக குரல் கொடுத்து நாடக காதல் என்ற கற்பனை வளம் சேர்த்து (நாடக காதல் எனக் கூறி தமிழ் பெண்களைத்  தான் இவர்கள் கொச்சை படுத்துகிறார்கள்) தங்கள் வாக்கு அரசியலில் காய் நகர்த்துகிறது. இப்படியாக வெளிப்படையாக வெறியாட்டம் நடத்தினால் தான்,"பிழைக்க" முடியும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள்.

2009-நாடாளுமன்ற தேர்தல்,2011-சட்டமன்ற தேர்தலில் இவர்கள் பச்சோந்திதனத்திற்கு மக்கள் போட்ட சூட்டை மறந்து இரண்டு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தியை எடுத்து வீசுகிறார்கள் கண்களை இருக்கக் கட்டிக் கொண்டு.

தான் செய்த தொழில் ரீதியாக உருவான வர்ண பேதங்களை திரும்பவும் தூசு தட்டி புத்துயிர் அளித்து அப்பாவி மக்களை அவர்களுக்காக போராட வந்த இறைதூதர் போல நாடகம் ஆடி கிளம்பிவிட்டனர் பாமக, யாதவர் கூட்டமைப்பு,கொங்கு முன்னேற்ற கட்சி,பேரவை, போர்வர்ட் ப்ளாக்,சமத்துவ மக்கள் கட்சி என புற்றீசல் போல கிளம்பிவிட்டனர்.

இதுவரை திராவிடம் என்கிற பெயரில் தமிழ் மக்களை ஆட்டு மந்தை கூட்டங்களாக வைத்து வாரிசு,குடும்ப அரசியல் நடத்தி வந்தனர். இப்போது சாதிவாரி கட்சிகள் புற்றீசல்களாய்....

மக்களே விழித்தெழுங்கள்...நாம் அனைவரும் தமிழர்கள். நமது இனம் இந்திய தேசியத்தால் அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கிறோம் ஒட்டுமொத்தமாக. 

சாதிக் கட்டுக்களை அறுத்தெறிந்து மூத்த குடி தமிழ்க்குடியாக ஒன்று கூடுவோம்; சாதி வெறியர்களை புறந்தள்ளுவோம்.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

கவிதை:காவிரித்தாய் கைவிரித்தாள்






பாரதம் என்பது மாயை;
அங்கு 
காவிரி என்றும் காணல் நீர் தமிழனுக்கு 

கவிதை: காதலின் நம்பிக்கை

திரும்ப கிடைத்துவிடும்
என்கிற நம்பிக்கையிலேயே
பல இதயங்கள் இங்கு
பரிமாறப்படுகின்றன...!!!