புதன், 3 மார்ச், 2021

தனியார்மயத்தை கண்டித்து வங்கி சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் -நாகப்பட்டினம்

 

வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதை கண்டித்தும்,  எந்த காரணங்களுக்காக தனியார் வசம் இருந்த வங்கிகள் 1969&1980இல் தேசியமயமாக்கப்பட்டதோ அந்த கொள்கைகளை முறியடிக்கும் வகையில் பின்னோக்கிய இந்திய ஒன்றிய அரசின் செயல்பாடுகளை நிறுத்தக் கோரியும் 9 வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு UNITED FORUM OF BANK UNIONS- UFBU 15.03.2021 &16.03.2021 பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதன் காரணங்களை மக்களிடம் கொண்டு சென்று ஆதரவை திரட்டவும் , போராட்டத்திற்கு வலு சேர்க்கவும்  நாகை மாவட்ட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு  சார்பாக தோழர்கள்  பாலசுப்ரமணியன், கனரா வங்கி, (AIBEA தமிழ்நாடு மாநில உறுப்பினர்),  ஜகன் & முருகானந்தம் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, & பெனோ (பேங்க் ஒப் இந்தியா ), சார்பாக 02.03.2021 அன்று கார்ப்பரேசன் வங்கி கிளை , நாகப்பட்டினம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது







தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ எனும் வகையில் அனைத்து வயதினரும், வங்கி & LIC அதிகாரிகள்,ஊழியர்கள்,  இந்தியன் வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சமூகத்தின் மீதான அக்கறையும் அன்பும் கொண்டு செயலாற்றிக்கொண்டு இருக்கும் எங்கள் ஆசான்  திரு அருண் ஐயா, தோழர் காளிமுத்து (இந்தியன் வங்கி *ஓய்வு), தோழர் சிவகுமார் (TNBEF)கலந்துகொள்ள,  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப் புள்ளி வைத்த தோழர் பாலசுப்ரமணியன்- நாம் ஏன் ஒன்று திரள வேண்டும், மக்களின் பங்களிப்புடன் கூடிய போராட்டமாக எடுத்துச் செல்வதின் முக்கியத்துவத்தையும், மாவட்ட அளவில் ஒன்று கூட வேண்டிய அவசியத்தையும் கூறி துவக்கி வைக்க ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன்  மாலை 05.15க்கு ஆரம்பித்தது .




தோழர் மதுசூதனன் வரவேற்புடன் கூடிய தொடக்க உரையில் பொதுத் துறையின் அவசியத்தையும், தனியார்மயம் ஆனால் முன்னிரிமைக் கடன்கள் இருக்காது, சேமிப்பிற்கு பாதுகாப்பு இருக்காது என்பதையும், வேலைவாய்ப்புகள் குறையும், அதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பதையும் சேவை குறைபாட்டிற்கு காரணம் ஊழியர்கள் பற்றாக்குறை என்பதையும். காலி பணியிடங்களை நிரப்பாமல் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் மோதலை உண்டு பண்ணும் அரசின் குறைகளையும் விளக்கினார். 



அதன் பிறகு விண்ணதிர முழக்கமிட்டனர் தோழர்கள் 








அதனைத் தொடர்ந்து எங்களைப் போன்றவர்கள் பலருக்கு வங்கி வேலை சாத்தியமே என தன்னம்பிக்கை விதை விதைத்து பலரை உருவாக்கி, தன்னுடைய விதை சமூகத்திற்கு நிழலாக நிற்பதைக் கண்டு புளகாங்கிதம் அடையும் பேருள்ளம் கொண்ட திரு அருண் ஐயா அவர்கள் சிறப்புரையில் போராட்டங்கள் மூலம் வங்கி ஊழியர்கள் கடந்து வந்த பாதையை தனது அனுபவம் வழி விளக்கி வங்கி ஊழியர் சங்கங்களின் முக்கியத்துவத்தையும், இளம் வங்கியாளர்களின் கடமையினையும் விளக்கி பேசினார்கள் 


அவர்களைத் தொடர்ந்து தோழர் காளிமுத்து (இந்தியன் வங்கி ஓய்வு), தோழர் சிவகுமார், தமிழ்நாடு வங்கி ஊழியர் கூட்டமைப்பு எழுச்சி உரை ஆற்றினார்கள். வேலை நிறுத்தம் என்பது ஊதியம் இழந்த விடுப்பு அல்ல, நமது எதிர்ப்பினை பதிவு செய்ய கிடைத்த வாய்ப்பு என்றும், ஒன்று பட்டு போராடினால் தான் இனி எதிர்காலம் என்பதையும் இளம் தலைமுறை வங்கியாளர்களும் உணரும் வகையில் சிறப்புரை ஆற்றினார்கள்

வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் பொதுமக்களுக்கும் தனியார்மயம் ஆனால் என்ன விளையும் என்பதை விளக்கும் வகையில் துண்டறிக்கை அச்சடித்துக் கொடுக்கப்பட்டது








தோழர் ஜெகன்(ஐ.ஒ.பி), தோழர் பெனோ(பி.ஒ.ஐ), தோழர் ஈஸ்வரன் (ஸ்டேட் பாங்கு ) முறையே திரு அருண், தோழர் , காளிமுத்து, சிவகுமார் ஆகியோருக்கு சால்வை அணிவிக்க அதனைத் தொடர்ந்து உற்சாக முழக்கங்களால் மீண்டும் ஒரு முறை விண் அதிர்ந்தது

பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் தோழிகள் உற்சாகமாக நேரத்திற்கு முன்பே வந்து கலந்து கொண்டது அனைவரின் ஒற்றுமையினையும், ஒன்று படுவதை இந்த அரசாங்கம் உணர்த்தி உள்ளதையும் காண முடிந்தது. போராட்டத்தின் அழைப்பு, விதை நாகை மண்ணில் வீரியமாக விதைக்கப்பட்டதாக உணர்ந்து மீண்டும் கூடுவோம் என்கிற உறுதி மொழிகளோடு  சிறப்பாக ஒலி அமைப்பு செய்து தந்த கனி ஆடியோஸ், ஊடக நண்பர்கள் திரு பாலசுப்ரமணியன் முதலானவர்களுக்கு நன்றி சொல்லி கலைந்தோம் 



-போராட்டத்தின் பலன் முழு வெற்றி மட்டுமே 

-தமிழ்மது 

4 கருத்துகள்:

  1. அருமை...தொழிலாளர்களின் ஒற்றுமையும் அவர்களின் தன்அவர்களின் தன்னலமில்லாத போராட்டமும் எப்பொழுதும் வெற்றியைத் தேடித் தரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் உற்சாகமாக கலந்து கொண்ட தோழர்கள் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

      நீக்கு
  2. அருமையான பதிவு மது, வாழ்த்துக்கள். இது போல் அனைத்து அறைகூவலையும் முன்னேடுத்து செல்லவும்.

    பதிலளிநீக்கு