திங்கள், 14 ஜூலை, 2025

இஞ்சியின் பயன்கள்- படித்ததை பகிர்ந்தது

 நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சியிலே!!


இஞ்சியை கறிக்கு டீக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்.

ஆனால் பாருங்க இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி செலவு மிச்சம் என்று!


நோய்களை நீக்குவதில்

இஞ்சி ஒரு சமையலறை மருத்துவர்!


1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.


2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.


3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.


4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.


5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.


6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.


7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.


8. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.


9. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.


10. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.


11. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.


12. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.


13. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.


15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.


15. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.


 நல்லது நான்கு பேருக்கு சென்று சேரும் என்கிற நல்ல எண்ணத்தில்...🌹

செவ்வாய், 25 மார்ச், 2025

மனோஜ் மறைவு- ஆழ்ந்த இரங்கல்

 

1976-2025


இறைவா,,, உனக்கு இரக்கம் என்பதும் இல்லையா?மனசாட்சி என்பது மரத்து  விட்டதா? ஊரை ஏய்த்து  பிழைப்பவன், அவனுடைய வாரிசுகள், மலையை வெட்டுபவன், மக்களுக்கு சாராயத்தை ஊட்டி சந்ததியை வளர்ப்பவன், தாய் மொழியாம் தமிழுக்கு எதிராக இந்தியை திணிப்பவன், அன்னைத் தமிழில் அர்ச்சனை என்று சொல்லி கூடமுழுக்கில் முற்றிலும் தமிழை புறக்கணித்து வடமொழியை தினிப்பவன், அதை திணிப்பவர்களை ஆதரிப்பவன், கோடி கோடியாக கொள்ளையடிப்பவர்கள், அப்பாவி மக்களை சுரண்டி பிழைப்பவர்கள், மதத்தின் பெயரால் கலவரம் செய்பவர்கள், வளங்களை திருடுபவன், ஆற்று மணலை திருடுபவன், கல்வி கொள்ளை அடிப்பவன், சாதிய படுகொலை செய்பவர்கள், அதற்கு துணையாக நிற்பவர்கள், பக்கத்து  மாநிலத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள், பக்கத்து மாநிலத்தின் வளங்களை சுரண்டுபவர்கள், அவர்களுடைய வாரிசுகள் என எல்லோரும் சுகமாக இருக்கின்ற பொழுது தொடர்ந்து தமிழுக்காக போராடுபவர்களையும். தமிழனாக தன்னை உணர்பவர்களை, இந்த தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற ஆசை கொண்டுள்ளவர்களையும் உன்னிடம் அழைத்துக் கொள்கின்றாயே. இதையெல்லாம் பார்க்கின்ற பொழுது இறைவன் இருக்கின்றானா என்கின்ற கோபம் வருகிறது 

மனோஜ்.. உனது ஆன்மா சாந்தி அடையட்டும் இயக்குனர் இமயம் அதை தாங்குவதற்குரிய வலிமையை பெறட்டும்.

ஞாயிறு, 23 மார்ச், 2025

தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக்கொள்கை நோக்கி - லெ ஜவஹர் நேசன்


புதிய கல்விக் கொள்கை (New Education Policy) என்பதை  இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கையாக (National Education Policy) திட்டமிட்டு சங்பரிவார் வழிகாட்டலுடன் அமல்படுத்த ஒன்றிய  அரசால் முடியும்போது ஏன் தமிழ்நாடு  தனக்கென தனித் தன்மை உள்ள கல்விக் கொள்கையை உருவாக்க முடியாது என்கின்ற ஒற்றைக்  கேள்வியுடன் தமிழ்நாடு எங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடையே குழு விவாதம் நடத்தி  அதன் மூலமாக அரசுக்கு ஓர் அழுத்தம் கொடுத்து இந்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்கின்ற மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்  கல்வியாளர் பேராசிரியர்  திரு லெ ஜவஹர்நேசன் அவர்கள். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அறிவியல் கழகம், அறிவொளி இயக்கம், த. மு. எ. க. ச  கூட்டு சேர்ந்து நாகப்பட்டினத்தில்  22. 3.2025 நடத்திய  கருத்தரங்கில் பங்கேற்று அவர் கூறிய கருத்துக்கள்  என்பது அனைத்து  கல்வியாளர்களும் பொதுமக்களும் மாணவர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் பாடத்திட்ட வகுப்பாளர்களும் கேட்டு விழிப்பு பெற வேண்டிய, இந்த சமூகத்தின் பேசு பொருளாக மாற வேண்டிய கருத்தியல். 




நீட் மனிதகுல  பகைவன்: நீட்டை  விலக்குவோம; நீட் மருத்துவ கல்விக்கும், சேவைக்கும் எதிராக உள்ளது   என்பதற்காக அமைக்கப்பட்ட ஏ கே ராஜன்  குழுவில்  பங்கேற்று ஆணித்தரமான வாதங்களை புள்ளிவிவரங்களோடு அவர் சமர்ப்பித்த அறிக்கை,   12 மாநிலங்களுக்கு மொழி பெயர்த்து அனுப்பப்பட்டு மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களால் பெரிதும் வரவேற்கப்பட்டதோடு, மருத்துவ மேற்படிப்பில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான  50 % இடத்தினை உறுதி செய்ய அந்த அறிக்கை எவ்விதம் காரணியாக இருந்தது என்பதை விளக்கினார். அந்த அறிக்கையை  30 நாளில் தயாரிக்க தன்னை எவ்வளவு வருத்திக் கொண்டார் என்பதையும், கல்விக் கொள்கை உருவாக்கிட இனி கிராமம் தோறும் செல்வேன் என்று அவர் சொல்வதை  கேட்கும்போது, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் வருந்தி அழைத்தும் அந்த வேலைகளை உதறித்தள்ளி தான் பிறந்த மண்ணுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற அவரது உயரிய கொள்கை ஒரு மு. வ.. திருவிக, வ. ஊ. சி.,  பாரதிதாசன் எல்லாம் ஏன்  இப்போது பிறப்பது இல்லை என்கிற எனது ஆதங்கம் தவறு..இதோ ஜவஹர்நேசன், மன்னர்மன்னன் போன்றவர்கள் உருவில்  இன்றும்  இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் மறைக்கப்படுகிறார்கள், அவர்கள் வாழும்போது மக்கள் அவர்களை புரிந்துகொண்டு கொண்டாடுவது இல்லை, மாறாக பாலகிருஷ்ணன், லியோனி, நாகசாமி போன்றவர்களை உயர் பதவியில் வைத்து மொழியை சிதைத்து தமிழினத்தை அழித்து அடிமை இனமாகவே வைதிருப்போம் என்கிற மிகப்பெரிய சதிதிட்டத்தில் திராவிட அரசாங்கங்கள் இருக்கின்றன என்பது விளங்கியது.

 அவருடைய சொற்பொழிவின் மைய புள்ளி என்பது இந்த நடுவண் அரசு  புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில்  சனாதனம், பஞ்சகோஷம் என்கிற வேத விசங்களை உள்ளடக்கி ஒரு தத்துவத்தை எடுத்து வருகின்றார்கள்; அது யாருடைய பிறந்தநாளை நாம் ஆசிரியர் நாளாக கொண்டாடுகிறோமோ அந்த ராதாகிருஷணன் போட்ட விடத்தின் நீட்சி  என்று கூறியது யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து இந்த சமூகத்தின் மீடு கட்டமைக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை தகர்த்து எறியும்  அவரது துணிவு பாராட்டுக்குரியது.   

அந்த புதிய கல்விக் கொள்கையை  இந்த மக்கள், இந்த தமிழ்நாடு அரசு எப்படி எதிர்க்க வேண்டும் என்றால் அதைவிட சிறந்த கொள்கை நம்மிடம் இருக்கிறது என்று நிரூபித்தால்  மட்டுமே அது சாத்தியப்படும். அப்படிப்பட்ட கொள்கையை நாம் இங்கு முன்வைக்கின்றோமா என்றால் அதற்கு பதில் இல்லை: நாம் நம்மை முன்னேறிய சீனர்களோடு ஒப்பிட்டு முன்னேற வேண்டும்; ஆனால் இந்த தமிழக அரசு பின்தங்கிய பீகாரோடு தமிழ்நாட்டை ஒப்பிட்டு புளகாங்கிதம் அடைகிறது" என்ற கூற்று நிதர்சன உண்மை. அந்த  புதிய தனித்துவமான கல்விக் கொள்கையை சாத்தியப்படுத்த வேண்டும் என்றால் இனி அரசாங்கத்தை நம்பி பயனில்லை என்பது அவருடைய பேச்சில் தொனித்தது. இது ஒரு ஜல்லிக்கட்டு புரட்சி போல ஸ்டெர்லைட் ஆலை புரட்சி போல மக்கள் கட்சி, சாதி இவைகளை கடந்து  ஒன்று திரண்டு மக்கள் குரலாக எதிரொலிக்க வேண்டும்:அதற்காக தான்  ஊர் ஊராக பயணம் செய்து இது ஏன் தேவை என்பதை பற்றி கூறுவேன் என்று அவர் பேசியது எப்படிப்பட்ட ஒரு மனிதரை இந்த தமிழ்நாடு மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளவில்லையே என்கின்ற ஒரு வேதனை தோன்றியது. 

அவர் உரை முடிந்த பிறகு குழு விவாதம் நடத்தப்பட்டது. மூன்று குழுக்களின் கேள்விகள் தொகுக்கப்பட்டு அவருக்கு வாசிக்கப்பட்டது. அதில் "நீட் தேர்வு தேவை; பாடத்திட்டதில் மட்டும் மாற்றம் தேவை, தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி உதவித் தொகை தேவையா" என்ற வலதுசாரி சிந்தனைக்கு அவர் அளித்த பதிலில்  நீட்  பயிற்சி வகுப்புகளின் கட்டணக் கொள்ளை, மருத்துவ கல்லூரி சேர்ந்தவர்களின் 77 விழுக்காடு பேர் நீட் தேர்வை 2,3 முறை எழுதியவர்கள், Lindon B Johnson அமெரிக்காவில் பின்தங்கிய கருப்பினர்களுக்காக கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பற்றி விளக்கி கூறி கேள்வி கேட்டவரை தவறை உணரவைத்த பாங்கு அவர் வாதத் திறமையை பறை சாற்றியது. 

நிகழ்ச்சி முடிவில் நண்பர் ஒருவர் "இவர் சொல்கிறபடி மக்கள் கிளர்ந்து எழுந்து மாற்றத்தை உருவாக்குவார்களா, சாத்தியப்படுமா" என்று  என்னிடம்  ஒரு கேள்வி கேட்டார். 15 ஆம் தேதி ஆனால் தங்களுக்கு உரிமைத் தொகை போடப்பட்டு விட்டதா என்று வங்கிக்கு முட்டி மோதும் இலவசங்களை நம்பி வாழும் மக்களிடம் மாற்றம் உருவாவது கடினம் தான், ஆனால் புரட்சி என்பது ஒரு விழுக்காட்டு மக்களால் உண்டாவது. நம்பிக்கையோடு பயணிப்போம் என்று பதில் சொன்னேன்


Justice AK Rajan Commitee NEET Report