திங்கள், 1 ஏப்ரல், 2019

வங்கிகள் மூடல் சர்வசாதரனமாகிவிட்டது

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் மட்டும் அல்ல. கேள்வி கேட்க ஆளில்லாத அரசியல் அமைப்பின் அராஜக நாள் ; உழைப்பாளிகளின் குரல்வளை நெறிக்கப்படும் நாள். 

இந்திய ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள் மூடப்பட்ட இரெண்டே ஆண்டுகளில் அடுத்த  சர்வாதிகார கொலை. விஜயா வங்கி & தேனா வங்கி மூடல். ஆண்டுக்கு ஆண்டு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பதில் இருக்கும் வேலை வாய்ப்பை பறிக்கும் எதேச்சாதிகார அரசுகள்; பன்னாட்டு குழுமங்களின் கைத்தடிகளின் கொக்கரிப்பு. 

வங்கிகள் இணைப்பிறகு இவர்கள் சொல்லும் காரணம் பலம் பெருகும். பரவலாக இருக்கும் போதே ஓர் அடிமட்ட குடிமகனால் நெருங்க முடியவில்லை. இப்படி பலம் பெருகிய பிறகு எப்படி சாதாரண மக்களுக்கு இணைக்கப்பட்ட "பெரிய" வங்கி தன் சேவைக்கரத்தை நீட்டும்? சலுகை காட்டும்?

ஸ்டேட் வங்கி இணைப்பிற்கு பிறகு தான் குறைந்த பட்ச இருப்பு ரூ.3000/- ஆனது. தானியங்கு பணப்பட்டுவாடா வசதிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்; கட்டணங்கள். இவர்களின் வாதம் பொய்யாகிப் போனது கண்கூடு.

ஒரு சிறிய மளிகைக் கடையில் நீங்கள் சென்று 50கிராம் சோம்பு வாங்க முடியும். இதுவே பெரிய பலசரக்கு கடையில் நீங்கள் போய் கேட்டால் ' போ போ காலைல போனி பண்ற மூஞ்ச பாரு" -இந்த அவமானம் தான் கிடைக்கும், அதுவும் காசு கொடுத்து பொருள் வாங்கும் இடத்தில்.

இதே நிலை தான் ஏற்படும் கடன் வாங்கவோ, கணக்கு தொடங்கவோ இந்த
"பகாசுர" வங்கிகளை வாசல் படி மிதிக்கும் போது. நீங்கள் ஒரு பெட்டிகடை வைக்க ஒரு ரூ.25,000/- கடன் கேட்டு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மேலாளர் என்ன சொல்வார் தெரியுமா? "எனது ஒரு மாத ஊதியம் ஒன்றரை லட்சம். ஒரு மணி நேரத்திற்கு என் வருமானம் ஆயிரம். கோடிக்கணக்குல பார்த்துட்டு இருக்கோம்; இந்த பிச்சைக்காசு 25000/- கடனை எல்லாம் பரிசீலித்து எங்கள் நேரத்தை விரயம் செய்ய முடியாது. வேற தனியார் நிதி நிறுவனம் போ..போ " என யாசகம் கேட்க வந்தவனைப் போல விரட்டப்படுவீர்கள்.  

உங்களுக்காக வங்கி ஊழியர்கள் போராடும்போது அவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள். உங்கள் நிலைத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள;  

வங்கி இணைப்பு என்ற பெயரில் வங்கிகள் மூடப்படுவதுடன் அதனால் வாடிக்கையார்களுக்கு பறிபோகும் சலுகைகள், உயரப்போகும் கட்டணங்கள் ஏராளம். 

இந்த அரச அராஜகங்களுக்கு முடிவு கட்டும் நாள் எந்நாளோ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக