ஞாயிறு, 4 டிசம்பர், 2011

கற்புக்கு விலை நிர்ணயம்-தமிழக அரசின் புதிய சாதனை

தமிழக பெண்களின் கற்புக்கு தமிழக அரசின் புதிய விலை நிர்ணயம்

காவல்துறையால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட இருளர் இனப் பெண்கள் நால்வருக்கு தலா ரூ.ஐந்து லட்சம் விலை பேசி தமிழக பெண்களின் கற்புக்கு அம்மா அவர்கள் புதிய விலை நிர்ணயம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நிவாரணத்தை தமிழக அமைச்சர் அளித்த பொழுது அந்த அப்பாவிப் பெண்கள் தமிழக முதல்வர் "புரட்சி" தலைவிக்கு நன்றிகள் கூறிய பொழுது "நீதி" நிலைநாட்டப்பட்டதைக் கண்டு உண்மையிலேயே கண்கலங்கியது.

விவசாயியின் விளை பொருள்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்ய முடியாத வக்கற்ற நாடாக இந்தியா உள்ளது என கவலையுற்றிருந்தேன்.ஆனால் மாண்புமிகு தமிழக முதலவர், பெண் இனக் காவலர் தமிழக பெண்களின் கற்புக்கு ஒரு நல்ல விலை நிர்ணயம் செய்து உள்ளது பாராட்டத்தக்கது.


மக்கள் அனைவரும் சமம் எனக்கூறும் கேடுகெட்ட இந்திய சனநாயக நாட்டில் இது தான் நிவாரணமோ? 

  • நிவாரணம் அளிக்கப்பட்டதை நாங்கள் எதிர்க்கவில்லை. யாருடைய பணத்திலிருந்து இது அளிக்கப்படுகிறது? இந்த அப்பாவிப் பெண்களுக்கு யாரால் பாதிப்பு வந்ததோ அவர்களின் ஊதியத்தில் இருந்து, சொத்துக்களை பறிமுதல் செய்து அல்லவா இந்த நிவாரணம் அளிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை,காணொளிகளை விளம்பரம் செய்து இதில் கூட தங்களின் வருமானத்தைப் பார்க்கும் ஊடகங்கள்,குற்றம் சுமத்தப்பட்ட காவலர்களின் முகங்களை வெளியிடவில்லையே,ஏன்?
  • குற்றம் செய்த காவலர்கள் பணி இடை நீக்கம் மட்டும். அய்யகோ...குற்றம் சாட்டப்பட்ட தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதிச் சோழன் வாழ்ந்த நாட்டில் இவ்வளவு கொடிய தண்டனையா?காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அம்மா அவர்களே..மறுபரிசீலனை செய்து அவர்களுக்கு பதவி உயர்வு தாருங்கள்.
முன் நிகழ்வுகள்:
இருளர் இனப் பெண்கள் மீது பொலிஸார் வன்புணர்வு-நன்றி BBC-தமிழோசை 
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வர் அண்மையில் போலீசாரில் வன்புணர்ச்சிக்குள்ளானதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இச் சம்பவம் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை துவங்கியிருக்கிறது. ஆயினுங்கூட அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை, மத்திய புலனாய்வுத் துறை, சிபிஐயின் விசாரணை வேண்டும் எனக்கோரி பொதுநலவழக்கொன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அது நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
போலீசாரால் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறும் 20 வயதான லட்சுமி என்ற பெண், தன் கணவர் காசியை கடந்த நவம்பர் 22 அன்று ஒரு திருட்டு சம்பவம் குறித்து விசாரிக்க போலீசார் முதலில் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் குடிசையை சோதனையிடுவதற்காக வந்தவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் சென்றதாகவும், காட்டுப் பகுதியில் லட்சுமி, மற்றும் அவர்களது குடும்ப்ப் பெண்கள் மூவரை, நான்கு காவலர்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட்த்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக்கோரி விழுப்புரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனுச் செய்திருக்கிறார்.
''ஆள் கடத்தல், வன்புணர்ச்சி, காயம் ஏற்படுத்துதல், திருட்டு” உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
கண்காளிப்பாளரிடம் மனு அளிக்கச் சென்றபோது, லட்சுமியையும் மற்றவர்களையும் இரவெல்லாம் போலீசார் விசாரித்த்தாகவும், மிரட்டியதாக்வும், ஆனால் அவர்களை மருத்துவபரிசோத்னைக்கு அனுப்பவில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கூறுகிறது.
இந்நிலையிலேயே சிபிஐ விசாரணை கோரப்பட்டிருக்கிறது.
சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்தின் தொகுதியான் ரிஷிவந்தியத்தில் சம்பவம் நடந்திருப்பதன் பின்னணியில், நடிகர் விஜயகாந்த் போலீசாரின் நட்த்தைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவரது தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
மறு மலர்ச்சி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, கண்துடைப்புக்காக காவல் துறையினர் மீது வெறும் வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறைகூறி, இக்குற்றத்தை செய்த காவல் துறையினரை உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட இருளர் பெண்களுக்கு இழப்பீடு
 29 நவம்பர், 2011

பாதிக்கப்பட்டபெண்களுக்கு தமிழக அரசு தலா 5 இலட்ச ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளது.
முதல்வர் ஜெயல்லிதா இதுகுறித்து வெளியிட்டுள்ள் அறிக்கையொன்றில் மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் போது அந்த கிராமத்தைச் சேர்ந்த நான்கு இருளர் பெண்களை காவல் துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, காவல் துறையில் ஒரு புகார் பெறப்பட்டது. குற்ற நடைமுறை சட்டப்பிரிவுன் கீழும் 176 (i)ன்படி இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச்) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இடைநீக்கம்

முதற்கட்ட விசாரணையில், இருளர் இனத்தைச் சேர்ந்த சில பெண்களை காவல் துறையினர் இரவு நேரத்தில் வாகனத்தில் வைத்திருந்ததாக தெரிய வந்ததால் தனது உத்தரவின் பேரில், ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்
உங்கள் கருத்துக்கள் முகநூலில் பகிர்ந்து கொள்ளுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக