தலையங்கம்: குரல் கொடுப்போம்... தடுப்போம்...!
பெரியாறு அணை பலமிழந்துவிட்டதாகக் கூறி புதிய அணையைக் கட்டியே தீருவது என்று அனைத்து முயற்சிகளையும் கேரள அரசு செய்து கொண்டிருந்தாலும், தமிழகத்துக்குச் சாதகமான வாதங்கள் மேலும் மேலும் வலுப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இதைத் தமிழக அரசு எந்த அளவுக்குத் தீவிரமாகக் கவனத்தில்கொண்டு செயல்படப்போகிறது என்பதைப் பொருத்திருக்கிறது கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம்.
மூன்று தினங்களுக்கு முன்பு பெரியாறு அணையைப் பார்வையிட, உச்ச நீதிமன்றம் அமைத்த ஐவர் குழு வந்திருந்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான இக்குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏ.ஆர். லட்சுமணன் தமிழகத்தின் சார்பிலும், கே.டி. தாமஸ் கேரள அரசின் சார்பிலும் உள்ளனர். மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னாள் செயலர் சி.டி தட்டே, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் டி.கே. மேத்தா ஆகியோரும் உள்ளனர். பெரியாறு அணை விவகாரம் தொடர்பான பிரச்னை இவர்களுக்கு முழுமையாகத் தெரியும்.
பெரியாறு அணையைப் பார்வையிட்ட பின்னர், இப்போது கேரள அரசு புதியதாக அணை கட்ட தீர்மானித்துள்ள இடத்தையும் இக்குழு பார்வையிட்டுள்ளது. அப்போது பல்வேறு கேள்விகளை இக்குழுவினர் கேரள அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். கேரள அதிகாரிகள் போதிய ஆவணங்களை அளிக்காத நிலையிலும், கேள்விகளுக்குத் திருப்தியான பதில்கள் கிடைக்காத நிலையிலும் இக்குழுவினர் தங்கள் ஆய்வை விரைவிலேயே முடித்துக் கொண்டு திரும்பினர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
115 ஆண்டு கால அணையின் பலம் குறித்து கேரள அரசு எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அணையைப் பலப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் திருப்திகரமாகவும் செய்துள்ளது. இதில் கேரள அரசு வேண்டுமானால் அதிருப்தி தெரிவிக்கலாமேயொழிய, தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருமே இந்த அணையின் பலம் குறித்தோ அல்லது அணையைப் பலப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தோ இதுவரை எந்தவிதமான எதிர்க்கருத்துகளையும்