திங்கள், 27 டிசம்பர், 2010

ஒன்று கூடுவோம் தமிழர்களாய்-காப்போம் பெரியார் அணையை


தலையங்கம்: குரல் கொடுப்போம்... தடுப்போம்...!

பெரியாறு அணை பலமிழந்துவிட்டதாகக் கூறி புதிய அணையைக் கட்டியே தீருவது என்று அனைத்து முயற்சிகளையும் கேரள அரசு செய்து கொண்டிருந்தாலும், தமிழகத்துக்குச் சாதகமான வாதங்கள் மேலும் மேலும் வலுப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இதைத் தமிழக அரசு எந்த அளவுக்குத் தீவிரமாகக் கவனத்தில்கொண்டு செயல்படப்போகிறது என்பதைப் பொருத்திருக்கிறது கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம்.
  மூன்று தினங்களுக்கு முன்பு பெரியாறு அணையைப் பார்வையிட, உச்ச நீதிமன்றம் அமைத்த ஐவர் குழு வந்திருந்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான இக்குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏ.ஆர். லட்சுமணன் தமிழகத்தின் சார்பிலும், கே.டி. தாமஸ் கேரள அரசின் சார்பிலும் உள்ளனர். மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னாள் செயலர் சி.டி தட்டே, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் டி.கே. மேத்தா ஆகியோரும் உள்ளனர். பெரியாறு அணை விவகாரம் தொடர்பான பிரச்னை இவர்களுக்கு முழுமையாகத் தெரியும்.
  பெரியாறு அணையைப் பார்வையிட்ட பின்னர், இப்போது கேரள அரசு புதியதாக அணை கட்ட தீர்மானித்துள்ள இடத்தையும் இக்குழு பார்வையிட்டுள்ளது. அப்போது பல்வேறு கேள்விகளை இக்குழுவினர் கேரள அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். கேரள அதிகாரிகள் போதிய ஆவணங்களை அளிக்காத நிலையிலும், கேள்விகளுக்குத் திருப்தியான பதில்கள் கிடைக்காத நிலையிலும் இக்குழுவினர் தங்கள் ஆய்வை விரைவிலேயே முடித்துக் கொண்டு திரும்பினர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
  115 ஆண்டு கால அணையின் பலம் குறித்து கேரள அரசு எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அணையைப் பலப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் திருப்திகரமாகவும் செய்துள்ளது. இதில் கேரள அரசு வேண்டுமானால் அதிருப்தி தெரிவிக்கலாமேயொழிய, தொழில்நுட்ப வல்லுநர்கள் யாருமே இந்த அணையின் பலம் குறித்தோ அல்லது அணையைப் பலப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தோ இதுவரை எந்தவிதமான எதிர்க்கருத்துகளையும் முன்வைக்கவில்லை. இதுவே தமிழக அரசுக்கு ஒரு சாதகமான நிலைதான்.
  இந்நிலையில், தமிழகத்தின் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் ஜெயலலிதா இந்த அணை தொடர்பாக இரண்டு நியாயமான விவாதங்களைக் கிளப்பியிருக்கிறார். ஒன்று, கரிகால் சோழனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றளவும் நன்றாக இருக்கும்போது, 115 ஆண்டிலேயே, மிகச் சிறந்த பிரிட்டிஷ் பொறியாளர் பென்னி குயிக் கட்டிய அணை மட்டுமே வலுவிழந்துவிட்டது என்று சொல்வது சரியா?
இரண்டாவது, இப்போதுள்ள அணை பூகம்பம் ஏற்படக்கூடிய இடத்தில் இருப்பதால், அணை உடைய நேரிட்டால் இடுக்கி மாவட்ட மக்கள் பெரும் உயிரிழப்பைச் சந்திக்க நேரும் என்று அச்சுறுத்திவரும் கேரள அரசு, அணைக்கு அருகிலேயே இன்னொரு அணையைக் கட்டுவது ஏன்? இந்த இரண்டுமே நியாயமான கேள்விகள்தான்.
  இப்போது பெரியாறு அணை அமைந்துள்ள இடத்திலிருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அணையைக் கட்டுவதன் மூலம் நீரில் மூழ்கும் வனப்பகுதியின் பரப்பளவு 50 எக்டேர். 600 கோடியில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் வனப்பகுதிவாழ் மக்கள் இடம்பெயரும் அவசியம் இருக்காது, பல்லுயிர் பெருக்கமும் பாதிக்காது என்று கேரள அரசின் பாசனத்துறை கூறுகிறது. ஆனாலும், உண்மை அதுவல்ல.
கேரள அரசு புதிய அணை கட்டுவதற்காகத் தேர்வு செய்துள்ள இடம் பெரியாறு புலிகள் காப்பு வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது என்பதால், இதற்கான நிலம் ஒப்படைப்பு செய்ய வேண்டிய அதிகாரம் மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது. புலிகள் காப்பு திட்டம் தேசிய வனவிலங்கு வாரியத்தின் கீழ் வருகிறது. இந்த வாரியத்தின் தலைவர் வேறு யாருமல்ல, பிரதமர் மன்மோகன் சிங்.
  புலிகள் பாதுகாப்புக்காக உலக அளவிலான மாநாடு அண்மையில்தான் நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாட்டில் புலிகளைக் காப்பதற்காகவும் 2020-ம் ஆண்டுக்குள் புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், புலிகள் இனப்பெருக்கத்துக்கு அச்சுறுத்தலாக அமையப்போகும் இந்த அணைத் திட்டத்துக்கு எப்படிக் கருத்துரு தயார் செய்வது என்பதில் கேரள வனத் துறையினருக்கே இருவிதமான கருத்து நிலவுகிறது.
  புலிகள் காப்பு வனப்பகுதியில் 50 எக்டேர் நிலப்பரப்பை கேரள அரசுக்கு வழங்குமாறு மாநில வனத்துறையின் அதிகாரிகள் பரிந்துரை செய்தாலும்கூட, கடைசியில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். புலிகள் காப்பு வனப்பகுதியில் கேரள அரசு அணை கட்ட அனுமதி வழங்காதீர்கள் என்று பிரதமரை வலியுறுத்துவதை தமிழக அரசு மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை.
  இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையாலும் சிபிஐ சோதனைகளாலும் காங்கிரஸ்-திமுக இடையே "விரிசல் இல்லாத' நிலை இருப்பதாகச் சொல்லப்பட்டபோதிலும், இப்போதைய மனக்கசப்புகளால் தமிழக அரசு, பெரியாறை (ரையும்!) மறந்துபோனாலும், தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகள் இதற்காக குரல் கொடுத்து, பிரதமர் அனுமதி வழங்காமல் தடுக்க முடியும். தடுக்க வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக