புதன், 27 மார்ச், 2013

மாணவர்களை தாக்கிய காங்கிரசு போக்கிலிகளை கைது செய்!!!

ஒரு மாத  காலமாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் மாணவர்கள் மீது வன்முறையை திணித்துள்ளது களவாணி காங்கிரசு. உருட்டுக்கட்டைகளும் செங்கல்லையும் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் இனத்தை அழிக்கும் கோடரிக் காம்பு ஞானதேசிகன் தலைமையிலான காங்கிரசு போக்கிலிகள்.  

ஒரு "கட்டிங்" வாங்கிக் கொடுத்தால் கூட்டிகொடுக்க கூட தயங்காத இந்த ஊழல் பேர்வழிகள் இத்தனை காலம் தம் இனமக்கள் கொன்றொழிக்கப்பட்டதை கண்டு ஆற்றாது வீறுகொண்டு சீரும்  அரிமாக்கள் மீது,இனம் காக்க எழுந்த புலிக்குட்டிகள் மீது வன்முறையை திணிக்க பார்க்கிறார்கள்.

தஞ்சைக்கு வந்த சிங்களவர்களை தாக்கினார்கள் என காணொளியை வைத்து தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சித் தோழர்களை உடனே கைது செய்த சீர்மிகு தமிழக காவல் துறை கொலைவெறி தாக்குதல் நடத்திய ஒரு காங்கிரசு கைக்கூலிகளை கூட ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

மாணவர்களை தாக்கிய பொறுக்கிகளை 24மணி நேரத்திற்குள் கைது செய்து  , பொய்யாக புனையப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களான வெங்கடேஷ் மற்றும் சதாசிவம் இருவரையும் உடனே விடுதலை செய்யாவிட்டால் காங்கிரசுக் கட்சி அலுவலகம் ஒன்று கூட தமிழகத்தில் இருக்காது என்ற மாணவர்களின் சீற்றம் கை மீறிச் செல்லும். அதற்கு பக்க தூணாக தோழர்கள் அனைவரும் திரள்வோம் என எச்சரிக்கை விடுப்போம்.



காங்கிரசு கைக்கூலிகளை கைது செய்யக் கூறி த.தே.பொ.கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் விடுத்த அறிக்கை:



===================================================
திருச்சியில் மாணவரைத் தாக்கியக் காங்கிரசாரைக் கைது செய்க!
===================================================
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!
===================================================

திருச்சியில் காங்கிரசுத் தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்களுக்கு ஈழப்பிரச்சினை தொடர்பாகக் கருப்புக் கொடி காட்டச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்களைக் காங்கிரசார் கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். முகமது ஜிப்ரி, கஜேந்திரபாபு, சத்தியகுமார் ஆகிய மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். முகமது ஜிப்ரிக்குக் கால் எலும்பு முறிந்துள்ளது.

காங்கிரசுக்காரர்கள் நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடத்திய எல்.கே.எஸ்.மகாலில் ஏற்கெனவே தயாராக உருட்டுக் கட்டைகள் வைத்திருந்திருக்கிறார்கள்.

அடிபட்டுக் காயமடைந்த வெங்கடேஷ், சதாசிவம் என்ற இரு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்கள் உள்ளிட்டு ஆறு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பிணையில் வர முடியாத பிரிவுகளைச் சேர்த்துள்ளார்கள். ஆனால், தொட்டியம் தொகுதியின் முன்னாள் காங்கிரசு சட்டப் பேரவை உறுப்பினர் இராசசேகரன் தம்பி இராமகிருஷ்ணன் தலைமையில் திரட்டப்பட்டு, தாக்குதலில் உருட்டுக்கட்டைகளுடன் ஈடுபட்ட குண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

அக்குண்டர்கள் மாணவர்களை அடித்தது மட்டுமில்லாமல் பேருந்துகளை உருட்டுக்கட்டையால் அடிப்பதையும் தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. அவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?

1965 சனவரி 25 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம் போனார்கள். மதுரையில் காங்கிரசுக்காரர்கள் ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். அதன்பிறகுதான் தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் பற்றி எரிந்தது. அதே போன்று ஒரு நிகழ்வைக் காங்கிரசார் திருச்சியில் தொடங்கியுள்ளார்கள்.

மாணவர்களிடமிருந்த கருப்புக் கொடியைப் பிடுங்கி வைத்திருந்த ஒரு காங்கிரஸ் இளைஞரை மாணவர் என்று தவறாகப் புரிந்து கொண்டு கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்திவிட்டார்கள். இப்பொழுது அந்நபரை மாணவர்கள் மீது புகார் கொடுக்கச் சொல்லி காங்கிரசார் வழக்குச் சோடித்துள்ளார்கள். இதற்குத் திருச்சிக் காவல்துறையினர் பலியானது ஏன்?

மேலும் வெங்கடேஷ், சதாசிவம் என்ற இரு மாணவர்களைக் காவல்துறையினர் எங்கே வைத்துள்ளார்கள் என்று கேட்கச் சென்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் இன உணர்வாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அறவழியில் 15 நாட்களுக்கு மேல் நடந்து வந்த மாணவர் போராட்டத்தில் வன்முறையை ஏவியுள்ளது காங்கிரசுக் கட்சி.

தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய ஆணையிடுமாறும் வன்முறையில் இறங்கி மாணவர்களைத் தாக்கிய காங்கிரசார் மற்றும் குண்டர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: தஞ்சை
நாள் : 27.03.2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக